துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் : வருமான வரி துறை தகவல்..

திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தினர்.

அவர்களுடன், தேர்தல் பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது.

துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் 7 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனுடன் அவரது மகன் மற்றும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு

சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அவரது கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.