சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்..

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெல்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
“3,120 கோடி ரூபாய் டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன்.

தான் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தி பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக முதல்வரின் மீது13.06.2018 அன்றே லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் புகாரினை முறையாக விசாரிக்காமல், என் சம்பந்தி அரசு கான்டிராக்ட் எடுக்கக்கூடாதா? என்றெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணவத்துடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்.

லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஐஜியை வைத்தே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புகார் மீதான முதற்கட்ட விசாரணையை நடத்த வைத்து, டெண்டர் விட்டத்தில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்திற்கே அறிக்கை கொடுக்க வைத்து லஞ்ச ஊழல் தடுப்புத் துறையையே கேலிக்கூத்தாக்கினார்.

தனக்குத்தானே நீதிபதியாகிக் கொண்ட முதல்வரைப் பார்த்து நாடே வெட்கப்பட்டது. இவ்வளவும் போதாது என்று அரசு தலைமை வழக்கறிஞரையும் அவ்வாறே வாதாட வைத்து முதல்வர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்து விட்டார்.

இந்திய முதல்வர்கள் வரலாற்றில் சம்பந்திக்கு ஒப்பந்தம் – அதுவும் தான் வகிக்கும் துறையிலேயே கொடுத்தது முதல்வர் பழனிசாமி மட்டும்தான் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைக்குனிவு. அதுமட்டுமின்றி உலக வங்கி நிதி அளித்துள்ள ஊழல் எதிர்ப்பு விதிகளை எல்லாம் அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்திய முதல்வரும் இவரே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆகவே சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழிவிட வேண்டும். ஆதாரங்கள் அழிப்புக்கு இடமளித்துவிடாமல் கால தாமதமின்றி சிபிஐ டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கிட வேண்டும்.

3,120 கோடி ரூபாய் ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதல்வர் பதவி விலக மறுத்தால், தமிழக ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.