மாநிலப் பட்டியலில் பள்ளிக்கல்வி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், ஜிஎஸ்டி வரிக்குள் டீசல் பெட்ரோல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

குழந்தைகளுக்கான திட்டம்

1. அங்கன்வாடிகளில் சிறு குழந்தைகள் மட்டுமல்லாது பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்கப்படும்.

2.ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போடப்பட்டது என்பது உறுதி செய்யப்படும்.

3. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்ஸோ நீதிமன்றங்கள் அதிகப்படுத்தப்படும், விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவது உறுதிச செய்யப்படும்.

4. குழந்தைகுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க குழந்தைகள் பாதுகாப்பு சேவை பிரிவு அமைக்கப்படும்.

சத்துணவு மற்றும் உணவுப்பாதுகாப்பு

1. குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் அதிகப்படுத்தப்படும். குழந்தைகளுக்கான உணவில் பால், முட்டை சேர்க்கப்படும். மதிய உணவுக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகப்படுத்தப்பட்டு, அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என கண்காணிக்கப்படும்.

2. அனைவருக்கும் உணவுப்பாதுகாப்பு கிடைக்க உறுதிசெய்யப்படும்.

கல்வி

1. நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அந்த தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வுக்கு இணையாக மாநிலங்கள் மருத்துவத்துக்கு தனியாக தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.

2. பள்ளிக்கல்வி மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படு்ம், உயர்கல்வி மத்தியப் பட்டியலில் இருக்கும்.

3. 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புவரை அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச, கட்டாயக் கல்வி அமல்படுத்தப்படும்.

4. கல்வி கற்பிக்கும் திறன் அதிகப்படுத்தப்பட்டு, தொழில்அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறைகள் புகுத்தப்படும்.

5. பள்ளிக்கல்வியோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும், சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும்.

6. கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி காக்கப்படும்.

7.மாணவர்களுக்கான உரிமை மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

சுகாதாரம்:

1. மருத்துவ வசதி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் குடிமக்கள் ஒவ்வொருவரும் இலவச மருத்துவ வசதியை அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளிலும் பெறுவது உறுதி செய்யப்படும்.

2. இலவச ஆம்புலன்ஸ் சேவை இன்னும் நாடுமுழுவதும் பரவலாக்கப்படும்.

3. அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் நிரப்பப்படும்.

ஜிஎஸ்டி வரி

1. நேர்முக வரிகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்படும்.

2. தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி மறு ஆய்வு செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும். புதிய ஜிஎஸ்டி வரி அனைவருக்கும் எளிமையாகவும், புரியும் வகையிலும், செலுத்தும் வகையில், சீராக இருக்கும்.

3. பெட்ரோல், டீசல், புகையிலை, ரியல்எஸ்டேட் அனைத்து பிரிவுகளும் ஜிஎஸ்டி 2.0க்குள் கொண்டுவரப்படும். இதற்கான காலவரையறை 2 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது.

4.மக்கள் அதிகமாக நுகரும் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

5. பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கும் ஜிஎஸ்டி வருவாய் பங்கு அளிக்கப்படும்.

குறைந்தவருவாய் திட்டம்

1. ஏழ்மையை ஒழிக்கும் வகையில் குறைந்த பட்ச வருமானம் ஆதரவு திட்டம்(நியாயம்) செயல்படுத்தப்படும்.

2. நியாயம் திட்டம் மூலம் 5 கோடி ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

3. ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச வருமானம் பெறுவார்கள். அந்த பணம் குடும்பங்களில் உள்ள பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்

வேளாண்மை

1. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசங்களி்ல விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போல் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

2. விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் போன்று விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் கொண்டுவரப்படும்.

3. பாஜக அரசு கொண்டு வந்த பயிற்காப்பீட்டு திட்டம் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு, புதிதாக வடிவமைக்கப்படும்.

4. வேளாண் துறையில் பெண்கள் ஈடுபட்டுவந்தால், அவர்களுக்கு வேளாண் உரிமைகளும், திட்டங்களின் பலனும் கிடைக்க உறுதி செய்யப்படும்.

5. நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் உணவு தானியங்களை சேமித்து வைக்கும் குளிப்பதன கிடங்குகள், தானிய கிடங்குகள் அமைக்கப்படும்.