தேர்தல் சீர்திருத்தங்கள் : அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் மொத்தம் 8 வி‌ஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்து கேட்க தேர்தல் ஆணையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் தேர்தலில் செலவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று கருதுகிறது