முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 253-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதுவரை 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிங்ஸ்புரி என்ற சொகுசு ஹோட்டலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவன் கடந்த 17 ஆம் தேதியே அங்கு சென்று அறையை முன்பதிவு செய்துள்ளான். அதன் பிறகு 21 ஆம் ஆம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்த்தி இருக்கிறான்.

இதற்கிடையே, கல்முனை அருகே சாய்ந்தமருது பகுதியில் இலங்கை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில்,

குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட தந்தையும், இரு மகன்களும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தாக்குதலில் 6 சிறார்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். அதில் உயிரிழந்த முகமது ஹாஷிம்,

அவரது இரு மகன்களான ஜைனி ஹாஷிம் ((Zainee Hashim)), ரில்வான் ஹாஷிம் ((Rilwan Hashim)) ஆகிய 3 பேரும் இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இலங்கையில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய இடங்கள் மற்றும் நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முக அடையாளங்களை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகளுக்கு இன்று முதல் இலங்கை அரசுதடை விதித்துள்ளது. முகத்தை மூடும் வகையிலும்,

அடையாளத்தை மறைக்கும் வகையிலும் எந்தவொரு ஆடைகளையும் அணியக்கூடாது என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.