பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பானி புயல் இன்று அதிகாலை அதிதீவிர புயலாக வலுபெற்று தற்பொழுது தென் மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 572 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும், இது தொடர்ந்து வலுபெற்று வடமேற்கு திசையில் நாளை மாலை வரை நகர்ந்து பின்னர் மெல்ல வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.

குமரிக் கடல், மன்னார் வளைகுளா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கி.மீ வேகத்திலும் சிலநேரம் 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மே 2 ஆம் தேதி கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீனவர்கள் இன்று தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் நாளை தென் மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதனான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறியுள்ளார்.