வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய போது விபத்து: காரில் இருந்த 7 பேரும் பலியான பரிதாபம்

வேலூர் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி ,ரெயில்வே போலீஸ் தலைமைக் காவலர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ரெயில்வே போலீஸ் ஏட்டு மெல்வின் தேஷ்முக் என்பவர் கோடைவிடுமுறையை கழிக்க குடும்பத்துடன் பெங்களூர் சென்றுள்ளார்.

அங்கிருந்து நண்பர் ஒருவரின் ஸ்விப்ட் காரில் வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்ககோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்றார். சாமி தரிசனம் முடிந்து அதே காரில் பெங்களூர் நோக்கி புறப்பட்டனர். காரில் போலீஸ் ஏட்டு மெல்வின் தேஷ்முக், இரு பெண்கள் இரு குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் இருந்தனர்.

கார் ஆம்பூர் அடுத்த வெங்கிளி என்னும் ஊரின் அருகே சென்ற போது காரின் இடது பக்க முன்புற டயர் வெடித்து சாலையில் இருந்து தறிகெட்டு சாலையோரம் இழுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. கார் பாய்ந்த வேகத்தில் அங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரைலரின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் உடைந்து நொறுங்கி லாரி டிரைலருக்கு அடியில் சிக்கிக் கொண்டதால் போலீஸ் ஏட்டு மெல்வின் தேஸ்முக் குடும்பத்தினர் உள்ளிட்ட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நொறுங்கிய காருக்குள் நசுங்கிய நிலையில் சிக்கி இருந்த 7 உடல்களை மிகவும் போராடி மீட்டனர்.

நெடுஞ்சாலை ஓரமாக விதிமுறையை மீறி கண்டெய்னரை நிறுத்தி இருந்ததாலேயே இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கண்டெய்னர் லாரி இல்லாமல் இருந்திருந்தால், கார் உருண்டு சாலையின் ஓரமாக உள்ள மணல் பகுதியில் விழுந்திருக்கும் எனவும், அப்போது இந்த அளவுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டிருக்க மாட்டாது எனவும் அந்தப் பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் முன், அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.