பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வால் தொடரும் கலவரம்: அவசர நிலை அமல்..

பிரான்சில் நடந்து வரும் பெரும் கலவரம் காரணமாக, அங்கு அவசர நிலையை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

பிரான்சில் எரிபொருள் மீதான வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், வாழ்வாதார செலவுகள் உயர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 17 ம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சாலைகள் மறிக்கப்பட்டும், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் செல்ல தடை போட்டும் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரின் தடுப்புகளை தகர்த்தெறிந்தனர். தீ வைத்தனர்.

போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. முகமூடி அணிந்த ஏராளமான இளைஞர்கள் இரும்பு கம்பிகள், கோடாரிகளுடன் சாலைகளில் சென்றனர்.

ஏராளமான வாகனங்களை தீவைத்து எரிக்கப்பட்டதுடன், கட்டடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக 133 பேர் காயமடைந்தனர். 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அர்ஜென்டினாவில் இருந்து விரைவில் நாடு திரும்ப உள்ள அதிபர் இமேனுவேல் மேக்ரான், கலவரம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோனை நடத்த உள்ளார்.

எந்த வடிவமும், தலைமையும் இல்லாமல் நடக்கும் இந்த வன்முறை குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.

இதில், அவசர நிலையை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.