ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்: ப.சிதம்பரம்..


தமிழக ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஆளுநரின் அறிக்கை ஆச்சர்யமடையச் செய்கிறது. ஆளுநர் பதவி என்பது நிஜமான தலைமை பதவி கிடையாது. அது அதிகாரமற்ற பதவி, மத்திய அரசின் மீது முதலமைச்சர் அச்சம் கொண்டு இருப்பதால், ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, ஆளுநருக்கு ஆய்வு செய்வதற்காக அதிகாரம் இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்ற வெளியிட்டது.

மேலும், ஆளுநர் நடத்தும் ஆய்வுகளில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.