ஆளுநர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி நடத்திய திமுக-வினர் கைது..


ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி திமுகவினர் பேரணியை துவங்கியுள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆளுநர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுகவினர் அண்ணா சிலை அருகே கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது, ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி உத்தரவிட்டார். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.