மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய விருப்பம்: ஆளுநர் பன்வாரிலால்

களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தால்தானே அரசைப் பாராட்ட முடியும் என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய ஆளுநர் பன்வாரிலால், இன்று காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் சென்று ஆய்வு நடத்தினார். பேருந்து நிலையத்தில் உள்ள பசுமைக் கழிப்பறையை ஆய்வு செய்த ஆளுநர், துடைப்பத்தைக் கையிலெடுத்து அவரே சுத்திகரிப்புப் பணியினையும் மேற்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், களத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதால் தான் பேருந்து நிலையம் தூய்மையாக இருப்பது தெரிய வந்ததாக கூறினார். இதைப் போல் கள ஆய்வை நடத்தினால் தான் அரசைப் பாராட்ட முடியும் என்றும் பன்வாரிலால் கூறினார். கோவை மாவட்டம் 89.2% கல்வியறிவு பெற்றிருப்பதாகவும், இது தேசிய சராசரியை விட அதிகம் என்றும் பாராட்டினார். மற்ற மாவட்டங்களுக்கும் இதேபோல் நேரில் சென்று ஆய்வு நடத்த விருப்பம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.

Governor review in Coimbatore