குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..


டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 8 வகையான பணிகளுக்கு ஆட்களை நேரடியாக நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.

இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் இந்தப் பணிகளுக்கான தேர்வு நடைபெறும்.

இதற்கான வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 30 மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 35 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாகத் தேர்வு எழுதுபவர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், இந்த வயது உச்சவரம்பை எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயது மற்றும் பிற பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 வயதாக உயர்த்தி சட்டசபையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள குரூப்-1 தேர்வின்போது, வயது உச்சவரம்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.