குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச., 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…


தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துதேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

செலவை குறைக்கும் வகையில் இரண்டு தேர்வையும் ஒன்றாக இணைந்து சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான சிசிஎஸ்இ-4 தேர்வுகள் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணத்தை டிசம்பர் 21-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.