தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை, இரவு மற்றும் இன்று காலையில் லேசாக மழை தூறியது. பகலில் கோடை போல் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 5-ந்தேதி காலை 8.30 மணி முதல் 6-ந்தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும்புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது. இதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

குடவாசல், திருவாரூர், குழித்துறையில் 5 செ.மீ, திருமனூர், நாகர்கோவில், விளாத்திகுளம், கோவில் பட்டியில் 4 செ.மீ. மழையும், பெய்துள்ளது. 

Heavy rain warning