நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் உலக வங்கிக் கடன் விதிகளை முதல்வர் மீறியது எப்படி?: ஆ.ராசா கேள்வி ..

உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது என்று உலக வங்கிக் கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகப்பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

கடந்த 20-ம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் இப்போது தோண்டத் தோண்ட கிடைக்கின்றன என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

இதற்கு பதிலடி தெரிவிக்கும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாதவராக முதல்வர் பழனிசாமி இருக்கிறார் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளரும் – மத்திய முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலு நேற்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”திமுக ஊழலுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி என்றும், ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பழனிசாமி அரசாங்கத்தின் மீதும், அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்மையார் ஜெயலலிதா மீதும் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜனநாயக மாண்புக்கு அடிநாதமாக விளங்கக்கூடிய அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத குற்றவாளிகள் இவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

அந்தக் குற்றவாளிகளுக்கு ஏவல் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்த காரணத்தால் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக திமுக மீதும், அதன் தலைவர் மீதும் வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி மீதும், அவருடைய உறவினர்கள் மீதும் நாங்கள் தொடுத்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் மனநிறைவுக்கு வந்த காரணத்தால், இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

நேர்மை, வெளிப்படைத்தன்மை, தலைமைப்பண்பு ஆகியவை அரசுக்குத் தலைமை தாங்குபவரிடம் இருக்க வேண்டும், ஆனால், அந்தப் பண்புகள் முதல்வருக்கு இல்லை என்று நீதிமன்றம் முடிவுக்கு வருகிற காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

திமுக ஊழல் கட்சி என்றால் அதில் உள்ள எந்த அமைச்சர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கிறார்கள், யார் யாரெல்லாம் சிபிஐக்குப் பயந்திருக்கிறார்கள்.

இதே 2ஜி வழக்கில் சிபிஐ என்னை விசாரித்தது, உச்ச நீதிமன்றம் என்னை மேற்பார்வையிட்டது. நானே கூண்டில் ஏறி சாட்சி சொன்னேன். திமுக மீதும், என் மீதும் சுமத்தப்பட்ட பழியை ஒவ்வொருநாளும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு பதில் சொன்னோம்.

எடப்பாடி பழனிசாமியைப் போல ஓடி ஒளிவதற்கோ, மற்றவர்கள் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதற்கோ, இதுவே தப்பு என்று உச்ச நீதிமன்றம் செல்வதற்கோ நாங்கள் எப்போதும் முனைந்ததில்லை.

திமுகவின் நாணயத்தின் முன்னால் எங்கள் தூசி அளவுக்குக் கூட அதிமுக ஆட்சி சமமாக இல்லை. எடப்பாடி பழனிசாமி சொன்ன பொய் பரப்புரையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன் ஆகியவற்றுக்கு எதிராக திமுக யுத்தம் தொடங்கியிருக்கிறது.

உறவினருக்கு அரசு ஒப்பந்தம் தரக்கூடாது என்று உலக வங்கிக்கடன் விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் மிகப்பெரிய அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது.

ஒரு பதவியில் இருக்கும்போது மாற்று நலன் இருக்குமானால் அவர்களுக்கு ஒப்பந்தம் தரக்கூடாது. வர்த்தக ரீதியாக, வணிக ரீதியாக, ரத்த ரீதியாக சம்பந்தப்பட்ட ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தம் தரக்கூடாது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தத்தில் நெருங்கிய வணிக உறவு அல்லது வர்த்தக உறவு என்ற இரண்டு வார்த்தைகளை எடுத்துவிட்டனர். க்ளோஸ் ரிலேஷன்ஷிப் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு, சட்டத்தைத் தவறாகச் சொல்லி விட்டு அந்த விளக்கத்துக்குள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

உலக வங்கிக் கடனைப் பெற்று எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு சாலை அமைக்கும் பணி தரப்பட்டுள்ளது. ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறை எடப்பாடி பழனிசாமி செய்கிறார்.

ஊழல் ஆட்சி என்று எங்களைச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அண்ணா திமுக கட்சியில் இருந்துகொண்டு அண்ணாவைக் காறித் துப்புகிறாரா? அண்ணா சமாதிக்குச் சென்று மாலை போடுவாரா?

அண்ணா, எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதை ஏற்பார்களா? சிபிஐ வழக்கை எதிர்கொண்ட ஒருவனுடன், சிபிஐ வழக்கை எதிர்கொள்ளப் போகிறவர் ஒரே மேடையில் பேசத் தயாரா? சவாலை ஏற்றுக்கொள்வாரா?

நெடுஞ்சாலை டெண்டர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் பழனிசாமி திமுக மீது குற்றம் சொல்லட்டும்.

மத்திய அரசின் அடிவருடியாக அதிமுக அரசு உள்ளது” என்று ஆ.ராசா தெரிவித்தார்.