“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு!…

மகாராஷ்டிர மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி பல நாட்கள் ஆன போதிலும் இன்னும் அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நீடித்தே வருகிறது.

கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க-வுக்கும் சிவசேனாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில்

105 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பு தொடர்பாக பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ.க ஹிட்லரை போல செயல்படுகிறது என சிவசேனா எம்.பியும் அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளதாலேயே பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.கவால் முடியாத அடுத்த நொடியே சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும்.

அரசியல் தலைவர்களை அச்சுறுத்தி அடிமையாக்குவது ஹிட்லரின் போக்கு. ஆனால் அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என பா.ஜ.கவை மறைமுக சாடியுள்ளார்

சிவசேனாவின் சஞ்சய் ராவத். காங்கிரஸ் மகாராஷ்டிராவுக்கு எதிரியும் அல்ல, டெல்லிக்கு மகாராஷ்டிரா அடிமையும் அல்ல என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.