ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் ரயில் : ஜெர்மனியில் அறிமுகம்..

ஹைட்ரஜன் எரிபொருளாகக் கொண்டு, முதல் ரயில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி அன்று, உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஜெர்மனி அறிமுகம் செய்தது.

டீசல் எஞ்சின்கள் மிகவும் அதிக விலைக் கொண்டதாகவும், சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனி அறிமுகம் செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் TGV தயாரிப்பாளரான அல்ஸ்டோம் நிறுவனம் 2 பிரைட் ப்ளூ கோராடியா ஐலிண்ட் ரயில்களை உருவாக்கி அளித்துள்ளது.

இவை ஜெர்மனியின் குஸ்ஹாவென் மற்றும் பிரிமெர்ஹாவென் ஆகிய நகரங்களுக்கு இடையிலான 100 கி.மீ தொலைவு இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய அல்ஸ்டோம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹென்றி போபர்ட்-லஃபார்கே, உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இவை படிப்படியாக மேம்படுத்தப்படும். பிரிமெர்வோர்டே ரயில் நிலையத்தில் ஹைட்ரஜன் நிரப்பும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 2021ஆம் ஆண்டிற்குள் லோவர் சாக்ஸோனிக்கு 14 ஜீரோ எமிசன் ரயில்களை தயாரித்து அளிக்கப்படும்.

ஜெர்மனியின் பிற மாகாணங்களும் ஹைட்ரஜன் ரயில்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்றார். ஹைட்ரஜன் ரயில்களில் எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இவற்றில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலப்பால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இறுதியாக நீராவியும், தண்ணீரும் மட்டுமே கழிவாக வெளியேறுகின்றன.

அதிகப்படியான ஆற்றல் ரயில்களில் இருக்கும் லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கப்படும்.

ஒருமுறை ஹைட்ரஜன் டேங்கை நிரப்பினால், கோராடியா ஐலிண்ட் ரயில்கள் 1,000 கி.மீ தூரம் வரை பயணிக்கக் கூடியது.