இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார்.

70 நாடுகளை சேர்ந்த 7000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, எரிசக்தி நீதி என்பதற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும்,

தனக்கும் அதுவே முக்கியமான இலக்கு என்றும் குறிப்பிட்டார். எரிசக்தி நீதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியிருப்பதாகவும்,

அதன் மூலமே அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் மின்சார வசதி சென்று சேர்ந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

எல்பிஜி இணைப்புகளின் அளவு 5 ஆண்டுகளுக்கு முன்னர் 55 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 90 சதவீதத்தை கடந்திருப்பதாகவும்,

நாட்டில் நீலப் பிழம்பு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மோடி கூறினார். மலிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகளின் சங்கமம்,

நீடித்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி விரைவுபடுத்தும் என மோடி, தெரிவித்தார். 2040ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் எரிசக்தித் தேவை இருமடங்காகும் என குறிப்பிட்ட மோடி,

அத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமான சந்தையாக இந்தியா இருப்பதாகவும் கூறினார்.

இந்தியா அண்மையில் 6ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்திருப்பதாகவும், 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளதாகவும், இந்த நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என உலக வங்கி போன்ற அமைப்புகள் கூறுவதாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.