இந்தியாவில் ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது; 7 லட்சம் பேர் கரோன பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா நோய் தொற்றின் காரணமாக முதல் முறையாக ஒரே நாளில் 40,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த போதிலும், ஒரு சில மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,425 பேர் பாதித்துள்ளன்ர. மேலும், 681 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7,00,087 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 3,90,459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது.

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து இந்த மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால், இம்மாநில அரசுகள் கவலை அடைந்துள்ளன.

மகாராஷ்டிராவில் 3,10,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,569 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,854 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 1,29,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1,70,693 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 1,17, 915 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் 50,297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2481 ஆக உயர்ந்துள்ளது.