இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., பிரதமர் இம்ரான்..

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துதல், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது,

எல்லை தாண்டி தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்து வந்தது.

இதனிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றார். அவர் அங்கு பதவியேற்றதும்,

இந்தியா பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு மீண்டும் தொடரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றார் போல்,

இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், காஷ்மீரில் மூன்று காவல்துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.

அதோடு மட்டும் இல்லாமல், பயங்கரவாதி புர்ஹான் வாணிக்கு அஞ்சல்தலையும் வெளியிட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த இந்தியா, ஐ.நா.,சபையில் நடைபெறவிருந்த பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை திட்டத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து இந்திய பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த இம்ரான்கான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும், நாட்டுக்கு வெளியே நடக்கும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்துவதை விருப்பம் இல்லை என்று கூறிய அவர்,

மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறினார். .