நாடு முழுவதும் இன்று முதல் அறிமுகமாகிறது அஞ்சலக வங்கிச் சேவை: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கடைக்கோடி கிராம மக்களும் பயனடைவதற்காந அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தபால்துறையை வங்கி சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவை விரிவாக்கமாக இது திகழும். கிராமங்கள்தோறும் இனி அஞ்சல் நிலையங்களில் மக்கள் வங்கி சேவையைப் பெறமுடியும்.இதனை இலக்காகக் கொண்டு இந்தியன் போஸ்ட் பேமண்ட் பேங்க் திட்டத்தை டெல்லியில் உள்ள தல்கத்தோரா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

IPPB என்று சுருக்கமாக அழைக்கப்படும் இத்திட்டம் மூலம் நாட்டின் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தற்போது சுமார் 650 தபால் நிலைய கிளைகளிலும் 3250 மையங்களிலும் இச்சேவை வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் அஞ்சலக வங்கிகளிலும் பெறலாம். சேமிப்பு, நடப்பு கணக்கு, பணப் பரிமாற்றம், நேரடி சலுகைகள் பரிமாற்றம், கட்டணம் செலுத்துதல், வர்த்தகத்திற்கான தொகைகளை செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும். ஏ.டி.எம்., மொபைல் செயலி, குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்பங்கள் உதவியுடனும் அஞ்சலக வங்கிச் சேவை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Post Payment Banks Starts today onwards

 ​