இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்: 329 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது.

டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது.

மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், துணை கேப்டன் ரஹானே 81 ரன்களும் எடுத்து, 4வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தனர். இதனால், இந்திய அணி ஓரளவிற்கு நல்ல நிலையை எட்டியது.

ஆனால், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ரிஷப் பண்ட் 24 ரன்களிலும், அஷ்வின் 14 ரன்களிலும் பிராட் ஓவரில் போல்டானார்கள். இறுதியில், இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.