ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பிய நிலையில், முன்ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிப்பதற்கு நீதிபதி எஸ்.பி.கார்க் நேற்று மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்படது.

இந்நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூலை 3-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஒ.பி.ஷைனி, சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை கைது செய்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.