ஐபிஎல் ஏலம்: அதிகவிலைக்கு ஏலம் போகும் வீரர் யார்?

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட இருக்கும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. இதன் 11வது சீசன் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத், ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் இடம் பெறுகின்றனர். இதுவரை 18 வீரர்கள் தங்கள் அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வீரர்களுக்கான ஏலம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகள் தடைகளுக்குப் பின் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்துக் கொள்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகிய மூவரையும் தக்கவைத்துள்ள நிலையில், உள்ளூர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினும் அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை ரவிச்சந்திர அஸ்வின் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், கேதர் ஜாதவ், சாஹல், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோரையும் வாங்க போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் ஆகியோரை எடுக்கவும் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

 

IPL 2018: Who could be retained before auction?