ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 55-வது லீக் போட்டி நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அதில் ஷேன் வாட்சன் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டூ பிளிஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் சுரேஷ் ரெய்னா 53(38) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டூ பிளிஸ்சிஸ் 96(55) ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு 1(2) ரன்னிலும், கேதர் ஜாதவ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் கேப்டன் டோனி 10(12) ரன்களும், பிராவோ 1(1) ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக, சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல். ராகுல், கிரிஸ் கெயில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியில் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் தனது அதிரடி ஆட்டத்தால் கே.எல். ராகுல் அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 71(36) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து கிரிஸ் கெயில் 28(28) ரன்களும், மயங்க் அகர்வால் 7(6) ரன்களும் எடுத்து ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினர்.

அடுத்ததாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 36(22) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் சாம் குர்ரன் 6(7) ரன்களும், மந்தீப் சிங் 11(9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் பஞ்சாப் அணி 18 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.