இஸ்ரேல் – காசா எல்லையில் பாலத்தீனர்கள் மீது தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு..

தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலத்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடே அதற்கு காரணமென்றும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆறு இடங்களில் “கலகம்” ஏற்பட்டதாகவும், “முக்கிய தூண்டுதல்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு” நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

“திரும்புவதற்கான மாபெரும் பேரணி” என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்துள்ளார்கள்.

இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன?

கடந்த 1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பாலத்தீனர்களின் நிலத்தை பறிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பாலத்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் இன்று (மார்ச் 30 ஆம் தேதி) அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெறுகிறது.
கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது நடந்த மோதலில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்த நிகழ்வை குறிக்கும் நக்பா (பெரும் ஆபத்து) தினம் கடைபிடிக்கப்படும் மே மாதம் 15 ஆம் தேதி இந்த போராட்டம் நிறைவுறுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பாலத்தீனர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான தங்கள் உரிமையை நீண்டகாலமாக கோரி வருகின்றனர். ஆனால், காசா மற்றும் மேற்குக் கரை நகரத்தில் இருக்கும் எதிர்கால பாலத்தீன மாகாணத்தில் மக்கள் குடியேற வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது.