அப்போலோ சென்றபோது ஜெ., மயக்க நிலையில் இருந்தார் : வித்யாசாகர் ராவ் தகவல்..

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வார்டுக்கு சென்றதாகவும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, வார்டுக்கே சென்று பார்த்ததாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியது
அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஆளுநர் மாளிகைக்கு எத்தனை மருத்துவக் குறிப்புகள் வந்தன?

முதல்வரின் உடல்நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ, எய்ம்ஸ் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு இடையே கடிதத் தொடர்பு இருந்ததா?

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஆளுநர் மாளிகை பதில் அனுப்பியுள்ளது. மேலும், குடியரசுத் தலைவருக்கு அக்டோபர் 6-ம் தேதியும், ஜெயலலிதா இறந்தபிறகு,

டிசம்பர் 7-ம் தேதியும் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அனுப்பிய கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அக்டோபர் 6-ம் தேதி எழுதிய கடிதத்தில், மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விரைந்து குணமடைய வேண்டி, ஜெயலலிதாவுக்கு 23-ம் தேதி கடிதம் எழுதியதாகவும், இதற்கு நன்றி தெரிவித்து அன்றையே தினமே ஜெயலலிதா பதில் கடிதம் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பு தொடர்பாக அப்போலோ மருத்துவமனையிலேயே அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசு 27-ம் தேதி செய்திக்குறிப்பு வெளியிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து 26-ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் மூன்று கட்டங்களாக ஜெயலலிதா பெயரில் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளால், மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் கூடியதாக வித்யாசாகர் தெரிவித்துள்ளார்