கலைஞர் பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்,..

தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என, திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை:
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் 97-வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி வட்ட பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கும் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

கரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். திமுக தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.