கொங்கு மண்டலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டம்..


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் மே 11,12,13 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது அக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கட்சி தொடங்கும்போது மதுரையில் பொதுக்கூட்டம் நடத்திய அவர் அதனைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டத்தை கூட்டி பேசினார்.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி மே 11-ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்கும் அவர், 12-ம் தேதி திருப்பூரில் மக்களை சந்திக்கிறார். அதனையடுத்து மே 13-ம் தேதி கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.