காரைக்குடியில் வழிப்பறியான 240 பவன் தங்கம் மீட்பு :காவல்துறை அதிரடி…


காரைக்குடியில் நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் கொள்ளை போனதானக நேற்று முன்தினம் காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கத்திடலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன் (வயது 36).

இவர், காரைக்குடி அம்மன் சன்னதி பஜாரில் நகை பட்டறை நடத்தி வருகிறார். சரவணனிடம் பலரும் நகை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

தனது பட்டறையில் நகைகளை தயாரிக்கும் சரவணன் அதில் ‘ஹால்மார்க் முத்திரை’ பதிக்க மதுரை கொண்டு செல்வார். நேற்று காலை நகைகளுடன் பட்டறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்சில் சரவணன் மதுரை சென்றார். அங்கு வேலையை முடித்துவிட்டு இரவில் காரைக்குடி திரும்பினார். பின்னர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சரவணன் வீட்டுக்கு புறப்பட்டார்.

சங்கத்திடல் பகுதியில் வந்தபோது, அங்கு நின்ற 4 பேர் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த நகைகளை கேட்டனர்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சரவணனின் கழுத்தில் கத்தியால் குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணன் வைத்திருந்த நகைகளை 4 பேரும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சரவணன், காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். 94 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வந்தனர்.. கழுத்தில் காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் காவல் துறை விசாரித்தனர்.அப்போது அவரின் பதிலில் பல குளறுபடிகள் இருந்ததால் விசாரணையில் கிடுக்குப்படி போட்டதால். பல உண்மைகள் வெளிவந்தன.

கழுத்தில் காயம் அடைந்த சரவணன் தனது நண்பர்களை வைத்து இந்த வழிப்பறி சம்பவத்தை அறங்கேற்றியது தெரியவந்தது. சரவணன் கூட்டாளிகளை கைது செய்த காவல் துறை அவர்களிடம் இருந்து 240 பவன் தங்க நகைகளை மீட்டனர்.

காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மாவட்ட துணை கண்காணிப்பாளரை் கார்த்திகேயனின் உத்தரவின் பெயரில் காரைக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் உமாமகேஸ்வரன் தலைமையில் வழிப்பறி புகார் கிடைத்த 18 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து 240 பவனை மீட்டது குறிப்பிடத்தக்கது.