கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை : கருத்துக்கணிப்பு முடிவுகள்..


தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே – கார்வி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
கர்நாடகாவில் வரும் மே மாதம் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போதைய சூழலில் தேர்தல் நடப்பதால் காவிரி விவகாரம் முக்கிய பிரச்னையாக இருக்கும். இந்த விவகாரம் காங்கிரசுக்கு ஆதரவான ஓட்டுகளை பெற்று தரும். இருப்பினும் தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு கிடைக்கும் என்பது சந்தேகமே.

அதாவது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரசுக்கு 90 முதல் 101 தொகுதிகள் கிடைக்கும். பாஜக,வுக்கு 78 முதல் 86 தொகுதிகள் கிடைக்கும். தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 34 முதல் 43 தொகுதிகள் வரை கைப்பற்றும். பிற கட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளை பெறும். மொத்தத்தில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சியை அமைக்க வைப்பதில் தேவகவுடா முக்கிய பங்காக இருப்பார். 33 சதவீதம் பேர் சித்தராமையா முதல்வராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரசுக்கு 37 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். பாஜவுக்கு 35 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.