கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த 17 எம்எல்ஏக்கள் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைவதற்கு உதவியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்தது. பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான எம்எல்ஏக்கள் பலம் இல்லாமல் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆட்சி கவிழ காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் 15 இடங்களில் டிச.5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிட வசதியாக தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதை ஏற்ற உச்சநீதிமன்றம் கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நவ.13ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவில் 17 கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும்.

கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது சரியே என்றும் .

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்கள் 17 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எம்எல்ஏக்களின் ராஜினாமா செல்லுமா என்பது பற்றி மட்டுமே சபாநாயகர் முடிவு எடுக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அனுமதி அளிக்க்கப்பட்டது.