காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை…


2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு காஷ்மீரில் தற்போது மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் படகு இல்லங்கள் பலவும் நீரில் மூழ்கி உள்ளன. காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி அமலில் உள்ளதால், வெள்ள பாதிப்புக்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்து வருகிறார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் அபாய அளவை எட்டும் அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜீலம் ஆற்றின் தாழ்வான கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.

காஷ்மீரில் 2014 ம் ஆண்டு ஏற்பட்டு போன்ற மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட போவதாக வாட்ஸ்ஆப்பில் வதந்திகள் பலவும் பரவி வருகின்றன. இதனால் வாட்ஸ்ஆப் குழுக்களின் அட்மின்களை பதிவு செய்யும்படி மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பதிவு செய்யப்படாதவர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் யாத்திரீகர்கள் வேறு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.