காஷ்மீரில் நாளை உள்ளாட்சித் தேர்தல்..

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான நகர உள்ளாட்சித் தேர்தல் வரும் 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் 17, 20, 24, 27, 29, டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இத்தேர்தலில் ஜனநாயகத் தன்மை கடைபிடிக்கவில்லை எனக் கூறி காஷ்மீரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையொட்டி அக்டோபர் 2 ம் தேதி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) தலைவர் யாசின் மாலிக் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு விசித்திரமான ஜனநாயாக விரோதப் போக்குகள் அங்கு நடைபெற்று வருவதாக காஷ்மீர் தலைவர்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.

போலீஸ் குவிப்பு, சிறையில் அடைத்தல், வீட்டுக்காவல், வீடுகளில் ரைடுகள், திடீர் தடைகள், இணைய உபயோகத் தடைகளை அதிகரிப்பது போன்றவற்றில் தற்போதைய காஷ்மீர் அரசு ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மிர்விஸ் உமர் ஃபரூக் தனது ட்வீட்டர் செய்தியில், “யார் போட்டியிடப் போகிறார்கள் என்றுகூட தெரியாத நிலை என்பது பொதுமக்களுக்கு வேடிக்கையே! என்ன ஒரு ஜனநாயக கேலிகூத்தாக இது அரங்கேறுகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பிரிவினைவாதத் தலைவர்கள் – ஒன்றாக இணைந்து ”ஜாயிண்ட் ரெஸிஸ்டென்ஸ் லீடர்ஷிப் (ஜேஆர்எல்)” என்ற அமைப்பின் கீழ் நாளையிலிருந்து தொடங்கும் காஷ்மீர் உள்ளாட்சித தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.