கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது கம்யூ., கூட்டணி…

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது சி.பி.எம், சி.பி.ஐ கூட்டணி.

இதில் 6 எம்.எல்.ஏ-க்களுக்கும், சிட்டிங் எம்.பி-க்கள் 6 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

கேரள மாநிலத்தில், பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம்., சி.பி.ஐ கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.

இந்தக் கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் பணிகள் செய்துவருகின்றன. எதிர்த் தரப்பில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் வலுவான வியூகம் வகுத்துவருகின்றன.

அதிலும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க நிலைப்பாடு எடுத்துள்ளன

. சி.பி.எம் அரசு, பெண்களை சபரிமலை சந்நிதானத்தில் அனுமதித்தது. எனவே, சபரிமலை விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், சி.பி.எம் கட்சிக்கு 16 சீட்டுகளும், சி.பி.ஐ கட்சிக்கு நான்கு சீட்டுகளும் என முடிவுசெய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன், அக்கட்சியின் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, காசர்கோடு தொகுதியில் சதீஷ்சந்திரன், ஆற்றிங்கல் தொகுதியில் சம்பத்,

கொல்லம் தொகுதியில் பாலகோபாலன், மலப்புறத்தில் ஷானு, ஆலப்புழாவில் ஆரிப், பத்தணம்திட்டா தொகுதியில் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் வாசவன், ஆலத்தூரில் பிஜூ, எர்ணாகுளத்தில் ராஜிவ்,

இடுக்கியில் ஜோயிஸ் ஜோர்ஜ், சாலக்குடியில் நடிகர் இன்னசென்ட், வடகரையில் பி.ஜயராஜன், கோழிக்கோட்டில் பிரதீப் குமார், பாலக்காடு எம்.பி.ராஜேஷ், பொன்னாணி தொகுதியில்

பி.வி.அன்வர், கண்ணூரில்.பி.கே.ஸ்ரீமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆரிப், பிரதீப்குமார், வீணா ஜார்ஜ், பி.வி.அன்வர் ஆகிய நான்குபேரும் இப்போது எம்.எல்.ஏ-வாக இருப்பவர்கள்.

நடிகர் இன்னசென்ட், சம்பத், பி.கே. ஸ்ரீமதி, பிஜூ, எம்.பி.ராஜேஷ், ஜோயிஸ் ஜோர்ஜ் ஆகியோர், சிட்டிங் எம்.பி-க்கள். ஜயராஜன், வாசவன் ஆகியோர், சி.பி.எம் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர்.

சி.பி.ஐ சார்பில் வயநாடு தொகுதியில் சுனில், திரிசூர் தொகுதியில் ராஜாஜி மாத்யூ தாமஸ், திருவனந்தபுரத்தில் திவாகரன், மாவேலிக்கரை சிற்றையன் கோபகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், திவாகரன் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியில் மொத்தமே இரண்டு பெண்களுக்கு மட்டும் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.