கேரளா போல் கோவாவும் பேரிடரைச் சந்திக்கும்: சூழலிய நிபுணர் மாதவ் கட்கில் எச்சரிக்கை



முக்கிய சுற்றுச்சூழலிய நிபுணர் மாதவ் கட்கில், இவர் கேரளாவுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தவர், தற்போது கோவாவும் கேரளா போல் கடும் நாசங்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியபகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் வருகிறது.

மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தமலைப்பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் நோக்கம், வர்த்தக நோக்கத்தில் இயற்கையைசூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரியஇயற்கை சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது என்று மாதவ் கட்கில் குழு எச்சரித்திருந்தது.

வளங்களை அழித்து, சுரங்கம் தோண்டுவது, கல்குவாரிகளை அமைப்பது, மரங்களை அழித்துபெரிய கட்டிடங்களைக் கட்டுவது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவற்றுக்கு கடும்கட்டுப்பாடுகளை விதித்தது.

ஏறக்குறைய 64 சதவீத பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாதவ் கட்கில் குழு அறிவித்தது. ஆனால் அப்போது காங்கிரஸ் அரசும் அங்குள்ள குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவா குறித்தும் மாதவ் கட்கில் எச்சரிக்கை விடுக்கும் போது, “மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அனைத்து விதமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இடர்பாடுகளும் தோன்ற ஆரம்பித்துள்ளன.

கேரளா போல் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி கோவாவில் இல்லாவிட்டாலும் கோவாவும் விழித்துக் கொள்ளவில்லையெனில் இதே பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கையை புறந்தள்ளக் காரணம் பேராசையே. வரம்பற்ற லாபங்களுக்கான பேராசையே. கோவாவிலும் இதனைப் பார்த்து வருகிறோம்.

மத்திய அரசு அமைத்த நீதிபதி எம்.பி.ஷா கமிஷன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளினால் சட்ட விரோத லாபங்களின் எண்ணிக்கை ரூ.35,000 கோடி என்று நிர்ணையித்தது.

மேலும் குறைந்த முதலீட்டில் பெரிய அளவில் கல்குவாரித் தொழிலிலும் ஏகப்பட்ட லாபங்கள் கிடைக்கின்றன.

தடுக்கப்படாத இந்தப் பேராசை லாபங்கள் பெருக அனுமதிக்கப்பட்டு வருகிறது, இதனால்தான் சமூகத்தில் பொருளாதார சமத்துவமின்மையும் இடைவெளியும் அதிகரித்துள்ளன.

எனவே இப்போது எந்த ஒரு பொறுப்புணர்வும் இன்றி இந்த வழிமுறைகளில் கொள்ளை லாபம் ஈட்டுவோர், இத்தகைய வளரும் சட்ட விரோத நடவடிக்கையில் அரசே அனுமதி வழங்குவதையும் உருவாக்குகின்றனர்.

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் சரியாக இயங்குவதில்லை என்பதை மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

கோவாவில் சுரங்கத்தொழிலினால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்பதை ஆராயுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒவ்வொரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் சுரங்கத்தினால் ஏற்படும் நீராதார தாக்கம் குறித்த தரவுகளை மறைத்து வெளியிடப்பட்டது.

கோவா சமவெளிகளில் நிறைய நீரோட்டங்கள் உருவாகின்றன, இதனை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் காட்டுவதேயில்லை. இந்த அறிக்கைகளில் கடுமையான தவறான கூற்றுக்கள் இடம்பெற்று வருகின்றன” என்று கடுமையாக சாடினார்.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளம் குறித்து கட்கலிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளேஅனைத்துக்கும் காரணம்.

மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம்”தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும்செயல்பட அனுமதித்ததும், பணம் ஈட்டும் நோக்கத்துடனும், வர்த்தக நோக்கிலும் வனங்களையும், இயற்கையையும் அழித்து ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், இத்தகைய பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.