கேரள பெருவெள்ளம்..நூறாண்டுகளில் காணாத பேரழிவு: ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்…


கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படை வீரர்களும் இணைந்து இரவு, பகலாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ அண்டை மாநிலங்கள் உட்பட ஏராளமான உலக நாடுகளும் முன்வந்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக, அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்தார்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இவ்வாறு அவர் கூறினார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா கோரியுள்ளதா? என்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், ‘இயற்கை பேரிடர்களை கையாள இந்தியாவிடம் போதுமான வசதிகள் உள்ளதாகவும், அதனால், எங்களிடம் எந்த உதவியும்கோரப்படவில்லை என்றும் கூறினார்.