கேரளாவின் உண்மையான நண்பன் துபாய் மன்னர் : முதல்வர் பினராயி புகழாரம்..


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை பல்வேறு தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ள, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமருமான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும், கேரளா மக்களுக்கு உதவ குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இந்திய சமூகமும் ஒண்றிணைந்து உதவும் இந்த முயற்சிக்கு அனைவரும் உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயன், “உங்களது அக்கறை மற்றும் பெரிய இதயத்துக்கு நன்றி. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் அளித்துள்ள இந்த உதவியை கேரள மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

உங்களது உதவி கேரளாவின் உண்மையான நண்பன் நீங்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு ஒரு சல்யூட்” என பதிவிட்டுள்ளார்.