கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்…

கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ ’தெகல்கா’ இணையதள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் டெல்லியில் நேற்று ஆவணப்படமாக வெளியிட்டார்.

அதில், கொடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் பலவற்றை எடுப்பதற்காக ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வந்து கொள்ளை நடத்தியதாகவும்,

அந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வரிசையாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் கொடநாடு கொலைகள் தொடர்பாக தெஹல்கா வெளியிட்டுள்ள புலனாய்வு ஆவணப்படத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.