கோவை குடிநீர் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…


கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டதாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில், சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் வாய்ப்பு கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில்,​ பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3,150 கோடிக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனம் தனது இணையதளப் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

டெல்லி மாநிலத்தின் மாளவியா மாவட்டத்தை தொடர்ந்து, குடிநீர் வழங்கிட இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த தனியார் நிறுவனம் மார் தட்டிக்கொள்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு இந்த தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது.

இதற்குமுன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சுயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் சொருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது. காசு இல்லாதவர்களுக்கு தாகம் தீர்த்துக் கொள்ள சொட்டுத் தண்ணீர்கூட கிடையாது என்ற நிலைமையும் ஏற்பட்டது என்கிறார்கள் சர்வதேச இயற்கை ஆர்வலர்கள்.

இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, அதிமுக அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவை மக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான செய்தி குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோவை மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.