கோவை: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லூரி தாளாளர்…

கோவையில் உள்ளது எஸ்என்எஸ் தனியார் கல்லூரி . இக்கல்லூரியின் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணியம் இருந்து வருகிறார்.

இவர் அந்த கல்லுரியில் வேலை பார்க்கும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சதிற்கு வந்திருக்கிறது.

இது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையை சரணவம்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் 23 வயது பெண் அதே பகுதியில் உள்ள எஸ்என்எஸ் என்ற தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இக்கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம்(64). இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

பின்னால் இருந்து கட்டி பிடித்து , முத்தம் கொடுத்து தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்ததில் , பல பெண்கள் பணியிலிருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் சரவணம்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணிற்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கல்லூரியின் தலைமை நிர்வாகியாக இருந்து வரும், நிர்வாக இயக்குனர் மகனிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.

அதற்கு அவர் வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது மிகப்பெரிய விஷயம் அல்ல, இதை பெரிது படுத்த வேண்டாம். போய் வேலையை பாருங்கள்.. இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அப்பெண் தனது நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து நண்பர்களின் அறிவுரைப்படி நிர்வாக இயக்குனரின் பாலியல் தொந்தரவுகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட ரகசிய கேமராக்கள் மூலம் அவரது சில்மிஷங்களை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பணியை விட்டு நிறுத்தியதுடன் பல்வேறு வகையில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கின்றனர்.

இதனால் பாதுகாப்பு வழங்கி, பாலியல் தொந்தரவு கொடுத்த நிர்வாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவையை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க அப்பெண் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து புகாரளிக்காமல் திரும்பிச் சென்றிருக்கிறார்.

கல்லூரி தாளாளரின் பாலியல் சீண்டல் வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆனாலும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருவது, கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.