குமரி அருகே மேலடுக்கு சுழற்சி : தென்மாவட்டங்களில் மீண்டும் மழை..

கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக தோன்றியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதத்தையும் ஏற்படுத்திச் சென்றது.

இதைத்தொடர்ந்து அந்தமான் அருகே உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனால் வடதமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்தம் வலுவிழந்த நிலையிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா வழியாக ஒடிசா சென்றது. இதனால் வடதமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை இல்லாமல் போனது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்