இலங்கை அதிபர் தேர்தல் : ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய வெற்றிமுகம்..

இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், குறைவான வாக்குசதவீதத்தில், சஜித் பிரேமதாசாவை விட, கோத்தபய முன்னிலை பெற்றிருக்கிறார்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா, அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார். அதிபர் தேர்வுக்கு தேவைப்படும் 50 விழுக்காடு வாக்குகளை கோத்தபய எட்டியிருக்கிறார்.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது.

இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12,845 வாக்குச்சாவடிகளில், நேற்று நடைபெற்றது. இதில் 81.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்றிரவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முற்பகல் 11.15 மணி நிலவரப்படி, கோத்தபய ராஜபக்சே 40,51,541 வாக்குகளை பெற்றிருக்கிறார். சஜித் பிரமேதசா 34,39,979 வாக்குகள் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாசாவை விட, சுமார் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாசா பெற்றிருக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

இருப்பினும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, உள்ளிட்ட மாவட்டங்களில், கோத்தபய ராஜபக்சே அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார்.

50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அத்தகையை பெரும்பான்மையை யாரும், தனதாக்காவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தேர்வை  அடிப்படையாக கொண்டு, வெற்றி நிர்ணயிக்கப்படும்.