சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரு கண்களாக இருங்கள் – மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

அரசு சேவைகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய ஆட்சியர்கள் பாலமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்

4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது..
சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. முதலமைச்சர் தலைமையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது தளத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.அதேபோல் 32 மாவட்ட ஆட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இறுதியாக 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மார்ச் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்பிக்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.

இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.. 6ம் தேதி நாளை மாவட்ட ஆட்சியாளர்களுக்கான கூட்டமும், 7ம் தேதி புதன் கிழமை காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.