தும்பை எனும் அரு மருந்து!

 

 

“தும்பைப் பூவுல தூக்கு மாட்டிக்கப் போறேன்கிறியா” என நடிகர் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக கேட்பார். ஆனால், தும்பைப் பூவும், செடியும் அதற்கு நேர்மாறான நற்பலன்களை நிறையவே தரக்கூடியவை.

 

பசுமை நிறத்தில் சற்றே குறுகிய இலைகளுடன் நல்ல வெண் நிறத்தில் அமைந்த பூக்களைக் கொண்ட தும்பை, எல்லா கால நிலையிலும் காணப்படுபவை என்றாலும், தும்பைச்செடிகள் மழைக்காலங்களில் மணற்பாங்கான இடங்களில் அதிக அளவில் வளரும் தன்மை மிக்கவை.

 

தும்பைச் செடியின் இலை, பூ, வேர்கள் உள்ளிட்ட முழுச்செடியும் மருத்துவ பலன்கள் தர வல்லவை என்றாலும், தும்பையின் இலைகளில் மிக அதிக அளவில், உடல் வியாதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கிறது.

 

தும்பை மலர்கள் பூத்துக் குலுங்கும் இடங்களில் அந்த மலர்களைச் சுற்றி, நிறைய தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எறும்புகள் இவை யாவும், காத்திருந்து தும்பை மலர்களில் உள்ள தேனை, சுவைத்துப் பருகி செல்லும். கிராமங்களில் சிறுவர்கள், சிறுமிகள் யாவரும் வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம், தும்பை மலர்களை பறித்து, மலர்களின் அடிப் புற காம்புகளில் வாயை வைத்து அதன் தேனை உறிஞ்சி பருகி, அதன் அற்புத இனிப்பு கலந்த மூலிகைச் சுவையில் மனம் குதூகலிப்பர். காசு கொடுத்து பாதிப்புகளை வாங்கும் நாகரீக நொறுக்குத் தீனிகளைவிட, கிராமங்களில் ஒரு பைசாவும் செலவில்லாமல், குழந்தைகளுக்குக் கிடைக்கும், பக்க விளைவுகள் இல்லாத, உடலுக்கு நன்மைகள் புரியும் இயற்கை தின் பண்டங்கள் இதுபோல ஏராளம் உண்டு. தூய்மைக்கு அடையாளம் காட்டப்படுவது தும்பை மலர்கள், கிராமங்களில் பேச்சு வழக்கில் சில விசயங்களின் தூயத் தன்மைக்கு தும்பை மலர்களையே, உதாரணமாகக் கூறுவர். ஒருவரின் மனத் தூய்மையை உயர்வாகக் கூற, தும்பைப்பூப் போல, அவளோட மனசும் வெள்ளை என்பர், வயதில் மூத்தோர் தலையெல்லாம் நரைத்து பழுத்த பழமாக காணப்படும்போது, தும்பைப்பூப்போல, அவருக்கு தலையெல்லாம் வெள்ளை, என்பர். மேலும் மனத் தூய்மைக்கும் அடையாளமாக விளங்கும் தும்பை மலர்கள், இறைவனை வழிபட உகந்த மலர்களாக, குறிப்பாக, முருகப் பெருமானுக்கு சூட்ட, பூஜை செய்ய சிறந்த மலராகவும் விளங்குகின்றன. தும்பை இலைச் சாற்றுடன் தேன் கலந்து தினமும் இரு வேளை பருகிவர, அடிக்கடி ஏற்படும் ஜலதோஷ பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். அதன் மருத்துவ நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

 

சில பெண்மணிகளுக்கு உடலில் உள்ள வாதத் தன்மைகளால், அவர்களின் மாத விலக்கு சீராக நடைபெறாமல், தாமதிக்கும் தன்மைகள் காணப்படும். இந்த பாதிப்பை சரி செய்ய, தும்பை இலை, காட்டாமணி என அழைக்கப்படும் உத்தாமணி இலை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, அதில் விரல் நுனியளவு எடுத்து, பாலில் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மாத விலக்கு பாதிப்புகள் யாவும் விலகி விடும். எனினும் இந்த மருந்து எடுத்துக் கொள்ளும் காலங்களில் அவசியம் உணவுக் கட்டுப்பாடு தேவை, உணவில், உப்பு, புளி மற்றும் காரம் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

 

தாய் மார்களின் கருப்பை பாதிப்புகள் நீங்க, தும்பை மலர்களை ஆட்டுப் பாலில் இட்டு காய்ச்சி, அந்தப் பாலை தொடர்ந்து பருகி வர, துன்பங்கள் தந்த கருப்பை பிரச்சனைகள் விலகி, உடல் நலமாகும்.

 

தும்பை இலைச் சாறு மற்றும் துத்தி இலைச் சாறு இவற்றை பாலில் கலந்து பருகி வர, உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளும் தீர்ந்து விடும்.
குழந்தைகளுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் மாந்தம், கழிச்சல் மற்றும் வயிற்றுப் பொருமல் குணமாக, தும்பை இலைகளுடன் ஓமத்தை அல்லது ஓமவல்லி இலைகளை அரைத்து, குழந்தைகளுக்கு பருகத்தர, அவையாவும் விலகி, குழந்தைகள் விரைவில் நலமடையும்.

 

தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணையில் இட்டு காய்ச்சி, ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வர, அவை எல்லாம் விரைவில் ஆறி விடும்.

 

டான்ஸிலிடிஸ் : குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றான டான்சிலிஸ் எனும் தொண்டைச் சதை பாதிப்பை தவிர்க்க தும்பை, அரு மருந்தாகிறது. தும்பை இலைகளை பயிற்றம் பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து, சாப்பாட்டில் முதலில் சாப்பிடும் பருப்பு போல மசித்து சாப்பிட்டுவர, தொண்டை சதை இன்னல்கள் விலகி, பாதிப்புகள் சரியாகும். தொண்டை பாதிப்பு நீங்க வேறொரு முறையாக, தும்பை இலைகளுடன் தும்பை மலர்கள், திப்பிலி பொடி மற்றும் அக்ரகாரம் எனும் மூலிகை இவற்றை தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி குறைந்து, உடல் நலமாகும் .

 

வாயுத் தொல்லை : தும்பை இலைகளை தினமும் காலை வேளைகளில் சாறெடுத்து பருகி வர, உடலில் வாயுத் தொல்லை தீரும். தும்பைச் சாற்றை, நெற்றியின் முன் பக்கம் மற்றும் கழுத்தில் தடவி வர, தலைவலிகள் யாவும் விலகி விடும்.

 

பூச்சிக் கடி : உடலில் ஒவ்வாமை அல்லது பூச்சிகளினால் உண்டாகும் கட்டிகள், தோல் நமைச்சல் மற்றும் சிரங்குகள் குணமாக, தும்பை இலைகளை அரைத்து, தினமும் அவற்றின் மேல், தடவி வர வேண்டும். தூய்மையான தும்பைச் செடி, விஷத்தை முறிக்கக் கூடிய ஆற்றல் மிக்கதாகும். தேள் கொட்டிய வலி வேதனை குறைய, தும்பை இலைச் சாற்றினை சில துளிகள் தேனில் கலந்து பருகக் கொடுத்தபின்னர், தேள் கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றைக்கொண்டு நன்கு தேய்த்து வர, விஷம் முறிந்து வலிகள் குறைந்து விடும். இந்த முறையைப் பயன்படுத்தி, மற்ற விஷக் கடிகளுக்கும் தீர்வு காணலாம்.

 

மலச்சிக்கல் : நேரம் தவறிய உணவு மற்றும் போதிய உறக்கமின்மை, மன உளைச்சல் பாதிப்புகள் இவற்றால் அடையும் உடல் நல பாதிப்பே, மலச்சிக்கல் ஆகும். மனிதரின் அன்றாட வாழ்வின் நிகழ்வை, பெருமளவு பாதிக்கும் மலச்சிக்கலை, முறையாக கவனித்து சரிசெய்து கொள்ளாவிட்டால், அது, உடல் அளவிலும், மன அளவிலும் மிகப் பெரிய இன்னல்களை, உருவாக்கி விடும். இந்த நிலையை தவிர்க்க, தும்பை இலைகளுடன் கொத்தமல்லி அல்லது கறிவேப்பிலை சேர்த்து துவையல் போல செய்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல்கள் விலகி, உடல் இலகுவாகி, மனம் உற்சாகமடையும்.

 

கண்பார்வை : கணினிகளில் நாள் முழுதும் அமர்ந்து பணியாற்றுவோர் அனைவரும் கண் வலி மற்றும் கண் பூத்துப்போவது எனும் பார்வைக் குறைபாட்டால் துன்பப்படுவர். அவர்களின் துயரம் போக்க, தும்பை இலைகள் மற்றும் மலர்களை அரைத்து பாலில் கலந்து சூடாக்கி பருகி வர, கண் பார்வைக் குறைபாடுகள் யாவும் நீங்கி விடும்.

 

மருத்துவ பலன்கள் தரும் தும்பை மலர்கள்

 

தலையில் நீர் கோர்த்து தலை பாரம், மூக்கடைப்பு மற்றும் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி பாதிப்புகளிலிருந்து மீள, தும்பைப் பூவை பாலில் கலந்து அரைத்து, நல்லெண்ணையில் காய்ச்சி, அந்த எண்ணையை, தலையில் நன்கு தேய்த்து, குளித்து வர, மேற்சொன்ன பாதிப்புகள் யாவும் நீங்கி, உடல் குணமடையும்.

 

உடல் சூட்டை தணிக்க, அவசியம் எண்ணைக் குளியல் எடுக்க வேண்டும், வாரமொரு முறையாவது எடுக்க வேண்டிய எண்ணைக் குளியலை நாம் முற்றிலும் புறக்கணித்ததன் விளைவாக, இன்று பல விதமான உடற் பிணிகளில் அல்லலுருகிறோம்.

 

நல்லெண்ணையில் தும்பை மலர்களை இட்டு காய்ச்சி, உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்த எண்ணையை நன்கு தேய்த்து, சற்றுநேரம் உடலில் ஊறிய பின்னர், குளித்து வர, கண்களின் பார்வைத் திறன் நன்கு தெளிவடையும். ஜலதோஷம் உள்ளிட்ட பாதிப்புகள் விலகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

 

தும்பைப் பூச்சாறெடுத்து, அதில் சில துளிகள் சம அளவு தேனுடன் கலந்து தினமும் பருகி வர, உடலின் நற்சத்துக்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத தாகம், நா வறட்சி மற்றும் உடல் அசதி யாவும் சரியாகி, உடல் நலம் பெறும்.

 

சிலருக்கு காதுகளில் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக, சீழ் வடிவதை தடுக்க, தும்பை மலர்களை பெருங்காயத் தூளுடன் சேர்த்து, எண்ணையில் காய்ச்சி, அதை காதுகளில் சில சொட்டுகள் தினமும் இட்டு வர, காது சீழ் வடிதல் பாதிப்புகள் யாவும் விரைவில் மறையும்.

 

இதுபோன்ற, எண்ணற்ற நற்பலன்களை, மனிதர்களுக்கு தரும் தும்பைச்செடிகளை, நகரங்களில் வசித்தாலும், வீடுகளில் தொட்டிகளில் இட்டு வளர்த்துவர, அவசர தேவைகளுக்கு, என்றும் துணையிருக்கும்.