லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு..


பாகிஸ்தானில் லாகூர் நகரில் போலீஸ் சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “லாகூரிலுள்ள ரைவிண்ட் நகரில் உள்ள நிசர் போலீஸ் சோதனைச் சாவடியில் புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இளைஞர் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நான் ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவர் உள்ளே வர முயற்சித்தார். அவரை என் உடன் பணிபுரிந்தவர் தடுத்த நிறுத்த முயற்சித்தபோது எனக்கு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. எனக்கு மருத்துவமனையில்தான் நினைவு திரும்பியது” என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.