அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா, கால தாமதம் செய்வதையே தமிழக அரசு விரும்புகிறதா என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், அதுகுறித்த தகவல்களை பிற்பகலில் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.