மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்.பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட்

மேகதாது அணை தொடர்பான விவகாரத்தை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்பிக்கள் 26 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்ற போது, அதிமுக எம்பிக்கள் இதே கோரிக்கையை முன்வைத்து மீண்டும் குரல் எழுப்பினர்.

இதையடுத்து, அவையின் மையப்பகுதிக்கு வந்து அவை சுமுகமாக நடைபெறுவதற்கு இடையூறு செய்வதாக கூறி அதிமுக எம்பிக்கள் 26 பேரை கூட்டத்தொடரின் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போன்று நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு, தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பிக்களான கனிமொழி, திருச்சி சிவா மற்றும் அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், விஜிலாசத்யானந்த் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.

அதன் பிறகு அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக வெங்கையாநாயுடு அறிவித்தார்.