மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கான 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் 7-ம் கட்ட தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அன்றைய தினம், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.அரியானா மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பரப்புரையும் நிறைவடைந்துள்ளது.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேலும், கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கடைசி நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.