மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 

மக்களவை, சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. செலவுகளை குறைக்கவும், நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கெனவே கருத்து தெரிவித்தார்.

 

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க் கின்றன. இதனால், நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என்று அக்கட்சிகள் கூறுகின்றன.

மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சட்ட ஆணையத்துக்கு பாஜக தலைவர் அமித் ஷா கடிதம் எழுதினார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

ஆனால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த எல்லா அரசியல் கட்சிகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வரைவு அறிக்கையையும், அதற்காக அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

 

அதில் ‘‘ஜம்மு- காஷ்மீர் தவிர மற்ற மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களின் பணம் மிச்சமாகும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகத்தின் மீதான சுமை குறையும். இதன்மூலம் அரசாங்கம் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

 

இதற்காக அரசியல் சட்டத்தின் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளது